Sunday 7 February 2016

இறுதி சுற்று - இறுதிச் சுற்றில் வெற்றி


கதை : பாக்ஸிங்தான் உயிர் என்றிருக்கும் மாதவன், தான் எல்லாவற்றையும் இழந்து எப்படி ஒரு மீன் குப்பத்து பெண்ணை உலக குத்துச்சண்டை சாம்பியனாக்குகிறார் என்பதுதான் கதை.

யதார்த்தமான நடிப்பு, யதார்த்தமான திரைக்கதை,யதார்த்தமான வசனம்,யதார்த்தமான குத்துச்சண்டை
காட்சிகள் என யதார்த்தம் படத்தை வெற்றியின் உச்சிக்கே எடுத்துச் செல்கிறது.

கதாநாயகி  ரிதிகா சிங் உண்மையிலேயே பாக்ஸர்.  படத்தில் சொல்லவா வேண்டும்?! ஆரம்பத்தில் தண்டால் எடுக்கும் காட்சியிலிருந்துஇறுதிச் சுற்றில் Knock out செய்யும் காட்சி வரை படத்தின் வெற்றிக்கு அச்சாணி.

மாதவன் 4 வருடங்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரம்.  பொண்டாட்டி ஓடிப் போனவள்.  தினம் ஒரு பெண் என பொம்பள பொறுக்கி கதாப்பாத்திரம். வயது பதவி பார்க்காமால் யாரையும் மதிக்காத அதிர்ச்சிக்குள்ளாக்கும்  பாக்ஸிங் கோச்.

ஆனால் அவர் பணத்தையும் மதிக்காமல், அவள் அவமானப் படுத்துவதையும் பொறுத்து, தன் பதவியையும் ராஜினாமா செய்து ஒரு குப்பத்து பெண்ணை உலக செய்தியாக்கும் போது ... தன்னிகரற்ற மாஸ்டராக உயர்ந்து நிற்கிறார்.

காதலுக்கு, டூயட் சாங்குக்கு, காமெடி நடிகர்களுக்கு, குத்துப்பாட்டுக்கு  கதையில் இடங்கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பாத  புத்திசாலித்தனமான வெற்றிப்பட டைரக்டர் சுதா கோங்குரா- சபாஷ் துணிச்சலான ஆளுதாங்கோ!

எல்லாம் சரி. விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா?  நீங்களும் கடைசிக் காட்சியில் ( ஆனந்த) கண்ணீர் வடிப்பீர்!  நம்பி போங்க...

80 /100. - அபார வெற்றி.